>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 19 மார்ச், 2018

மாணவர்களுடன் போட்டி போட்டு விளையாடிய பொதுமக்கள்! - அரசுப் பள்ளி ஆண்டு விழா ருசிகரம்


அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டதால், ஊர்த்திருவிழா போல களைக்கட்டியது ஆண்டுவிழா.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று, ஆண்டுவிழாவும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.


இதில், குழந்தைகளின் ஆர்வத்தையும் போட்டி மனப்பான்மையையும் தூண்டும் வகையில், பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில்,மாணவர்களுடன் சரிக்குச் சரி நின்று பெற்றோர்கள் போட்டி போட்டு விளையாடினார்கள். அவர்களுடன் ஊர் பொதுமக்களும், 'எங்க ஊர்...எங்க பள்ளி' என்று உரிமையுடன் போட்டிகளில்  கலந்துகொண்டு அசத்தினார்கள். ஏதோ ஊர்த் திருவிழா போல் நடைபெற்ற இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில், குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி, பெரியவர்களும் பெற்றோர்களும் தங்கள் வயதை மறந்தார்கள். அங்கே ஒரு 'ஜாலி ஹோலி'யே கொண்டாடப்பட்டது.


இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்சிம்சோன் பாஸ்டீன் சொல்லும்போது, "இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா, குளவாய்ப்பட்டி இளைஞர்கள், பொதுமக்களின் தன்னார்வத்தோடு கொண்டாடப்படுகிறது. ஆண்டு விழா என்று நான் சொன்னவுடன் ஊர்ப் பொதுமக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் என்னிடம், ' குழந்தைகள் அனைவரும் மேடை ஏற வேண்டும். போட்டிகளை நீங்கள் நடத்துங்கள். அதற்குத் தேவையான உதவிகளையும் செலவுகளையும் நாங்கள் செய்துதருகிறோம் என்று கூறினார்கள். அந்த வார்த்தைகள் என் மனதிற்கு மிகுந்த தெம்பைக் கொடுத்தது. அத்துடன்,  இப்பள்ளியில் வேலைபார்த்து  ஓய்வுபெற்றுச் சென்றுள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்கள் வீரன்,கண்ணன் ஆகியோரையும் மேடையில் பாராட்ட வேண்டும் என்று ஊர்மக்கள் விரும்பினார்கள். அந்தப் பாராட்டு விழாவையும் ஆண்டு விழாவோடு சேர்த்துக்கொண்டோம். நம் பள்ளிக்கு ஊர்ப் பொதுமக்கள் இவ்வளவு ஒத்துழைப்பு தருகிறார்களே, அவர்களை நாம் ஏதாவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பானை உடைத்தல்,கயிறு இழுத்தல்,கோலப் போட்டி எனப் பல போட்டிகளை நடத்தினோம்.போட்டியில் ஊர்ப் பொதுமக்கள்  முழு ஈடுபாடோடு கலந்துகொண்டார்கள். இதுபோன்ற விழாக்கள்மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்பதே எனது இலக்கு" என்றார்.

ஆண்டுவிழாகுறித்து அவ்வூரைச் சேர்ந்த சின்னாத்தாள் என்பவர் ரொம்பவே சிலாகித்துப் பேசினார்."பள்ளியில் ஆண்டுவிழா என்றதும்  குழந்தைகளைவிட, நாங்கள்தான் ரொம்பவும் ஆர்வமாக இருந்தோம். காரணம், அன்றைக்கு  எங்கள் குழந்தைகளின் தனித்திறமையை நாங்கள் நேரில் பார்க்கவும், பொதுமக்கள் அவர்களைப் பாராட்டுவதைக் கேட்கவும் முடியும். இங்கே வந்ததும் எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்கும் பல்வேறு போட்டிகளை நடத்தி, ஆசிரியர்கள் அசத்திட்டாங்க. எங்கள் பிள்ளைகளுடன் போட்டிபோட்டதும் அவர்களிடம் விட்டுக்கொடுத்துத் தோற்றதும், அவ்வளவு பெரிய சந்தோஷத்தை எங்களுக்குக் கொடுத்தது" என்றார். 10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பள்ளியில் சிறப்பாக நடந்தது ஆண்டுவிழா.