சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக 
பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில்
 தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
.
தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார்
 பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் 
கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
உத்தரவு :
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், 
ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும்,
 ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு
 உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் 
வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.
பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை
 மாணவர்கள், தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை படித்தால்,
 அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
3ம் வகுப்பு வரை :
பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு,
 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே,
 தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு
 முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக
 பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது 
என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து, உயர் நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு 
உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு
 விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. 
தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில்
 இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 
10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என,
 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
..........................................................................................................................................