>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 4 ஜூலை, 2017

பள்ளிகளில் உபரியாக உள்ள 5,000 ஆசிரியர்களை வட மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொருஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர்சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஞாயிறு, 2 ஜூலை, 2017

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?

அன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன். மரங்கள் சூழ, லாரி பேக்கர் ( உலகம் கொண்டாடும் கட்டட கலைஞர் ) கட்டட அமைப்பில் கட்டப்பட்டிருந்த, குழந்தைகள் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த அந்த பள்ளிக்கு நான் அன்று வேண்டா வெறுப்பாகத்தான் சென்றேன்.

தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் தொடக்க கல்வி அலுவலர், அலுவல் நிமித்தமாக தருமபுரி மாவட்டத்தில் காடுகள் சூழ இருக்கும் நாகர்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளி பயிற்றுவிக்கும் முறை, கட்டட அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், முக்கியமான அந்த பள்ளியின் தாளாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், நான் அந்த பள்ளியை ஒரு முறையேனும் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் சொல்லிய போது, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.
அரசின் பங்களிப்பில்லாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும், பெரும்பாலும் பணத்தை நோக்கமாக கொண்டது என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால்தான் அந்த பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக சென்றேன். மாணவர்கள் மற்றும் தாளாளருடான அந்த நெடிய உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றியது. நாம் பார்க்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரிய வைத்தது. 
இவ்வளவு தீமைகளுக்கு பின்பும் இவ்வுலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று என்னுள் அவ்வப்போது எழும் கேள்விக்கு... ‘இன்னும் இவர்களால்தான் இவ்வுலகம் சிறிதேனும் அறத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது' என்று புரிய வைத்தது...’
பீடிகை போதும், வாருங்கள் பள்ளிக்கு போவோம்...
அந்த பள்ளியில் நான் இருந்த சில மணி நேரங்களில் பெற்ற அனுபவத்தை, அடைந்த பரவசத்தை, உங்களுக்கு அப்படியே கடத்தும் சொல் ஆளுமை எனக்கில்லை. இருந்தாலும் முயல்கிறேன்...
புவிதம் - காட்டுப் பள்ளி:

புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்...? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்...? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன். 
நான் அந்த பள்ளிக்கு சென்றது ஒரு வெண்மேகம், தன் ஒளிக்கீற்றை பரப்பிய ஒரு காலை வேளையில். குழந்தைகள், கைகளில் குடம், களை கொத்தியுடன் பரபரப்பாக அங்கு இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். “பசங்களா... எங்கடா போறீங்க... ?” என்று ஒரு மாணவனை இடைமறித்து கேட்டபோது, “அண்ணா.... நாங்க பள்ளி தோட்டத்தில காய்கறிகள் விதைத்து இருக்கோம்னா... அதுக்கு தண்ணி ஊத்தப் போறோம்...?” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடினான். 
அவனை பின் தொடர்ந்து சென்றபோது, மாணவர்கள் பள்ளியின் பின் புறம் உண்டாக்கி உள்ள காய்கறி வனத்தை அடைந்தேன். முதிர்ந்த விவசாயிகள் போல், ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையே அந்த மாணவர்கள் உண்டாக்கி இருந்தார்கள். 
அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
“அண்ணா... நாங்க கீரை, உருளைக் கிழங்கு, சுரைக்காய், பீர்க்கை எல்லாம் போட்டு இருக்கோம்னா.... எட்டாவது படிக்கிற அண்ணன் எல்லாம் சேர்ந்து, சோளம் போட்டு இருக்காங்க...” என்றாள் நான்காம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.
பள்ளி மணி ஒலிக்கிறது. மாணவர்கள் உற்சாகமாக கை கால்களை கழுவிவிட்டு வகுப்பிற்கு செல்கிறார்கள்.
“மிஸ்... கிளாசுக்குள் வேண்டாம்... இன்னைக்கு மரத்தடியில் வகுப்பெடுங்க...” என்கிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன். மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை வழிமொழிகிறார்கள். அன்றைய வகுப்பு மர நிழலில் நடக்கிறது. அதே வகுப்பை சேர்ந்த இன்னொரு மாணவன், “மிஸ் எனக்கு இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு... நான் ஓவியம் வரையட்டுமா..” என்கிறான். அவனை அந்த ஆசிரியர் அனுமதிக்கிறார். 
மாணவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இப்படியாகதான் இருக்கிறது புவிதம் பள்ளி. 

அமைதிக்கான ஒரு தேடல்...
உங்களுக்கு அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சியை பற்றி கூறிவிடுகிறேன். அப்போதுதான், அந்த பள்ளியை பற்றி புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும். 
மீனாட்சி, உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.
'நாம் பள்ளிகளில் வன்முறையை பயிற்றுவிக்கிறோம்...'
இனி, மீனாட்சியுடனான உரையாடல்...
உங்களுடன் பேச நிறைய இருக்கிறது. முதலில், உங்கள் பள்ளியின் பெயரில் இருந்தே தொடங்குகிறேன். ஏன் பள்ளிக்கு புவிதம் என்று பெயர்...?
"நாங்கள் நேரத்திற்கு பின்னால் ஓடுவதில்லை. நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்" என்று சோளக்கூழைத் தந்துவிட்டு பேச துவங்குகிறார். "நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு அப்படியொரு பெயர் வைத்தேன்."
புரியவில்லையே...?
"புவிதம் = புவி + இதம். அதாவது புவிக்கு இதமாக இருப்பது. எங்கள் பள்ளி அப்படிதான் இயங்குகிறது." 
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் எங்களுக்கே, தமிழ் தகராறாக இருக்கிறது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உங்கள் மொழி அறிவு வியக்க வைக்கிறதே...?
"அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழகம் வந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், நான் இன்னும் தமிழ் மாணவிதான். இன்னும் தமிழ் பயின்று கொண்டுதான் இருக்கிறேன்." 
சரி. மீண்டும் விஷயத்திற்கு வருவோம். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பள்ளி துவங்கியதற்கான நோக்கம் என்ன...? நீங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமும் வாங்குவது இல்லை என்று அறிகிறேன்... கல்வி பணம் ஆகிவிட்ட சூழலில், உங்கள் நோக்கம்தான் என்ன...? 
"இந்த பள்ளி என் சுயநலத்தின் நீட்சி. இங்கு குடிபெயர்ந்தவுடன், என் வீட்டில் இந்த கிராம குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூசன் எடுக்க துவங்கினேன். எங்கள் மகள் கயாவும் வளரத் தொடங்கினாள். குழந்தைகள் மீது வன்முறையை திணிக்கும் பள்ளிகளில் என் மகளை சேர்க்க விருப்பமில்லை. அதே நேரம் மாலை நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர்களும், முழு நேரமாக இங்கு படிக்க விரும்பினார்கள். என் மகளுக்காகவும், அந்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த பள்ளியை துவங்கினேன்." 
'வன்முறையை திணிக்கும் பள்ளிகள்’. நீங்கள் வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்...?
"ஆம். வன்முறைதான். குழந்தைகள் அனைவரும் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களை அமர்ந்திருக்க வைப்பது வன்முறை இல்லையா...?. அவர்கள் எவ்வளவு இறுக்கமாக இருப்பார்கள், அதை நீங்கள் உணரவில்லையா... சரி.. மற்றவர்களை விடுங்கள்... நீங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்திருப்பீர்கள்...? இந்த இறுக்கம் அவர்கள் சுயமாக சிந்திப்பதை தடுக்கிறது. அவர்கள் சுயத்தை அழிக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒப்பீட்டளவில், அரசாங்க பள்ளிகள் மிகவும் சுதந்திரமானது. அங்கு பயிலும் மாணவர்கள்தான் அதிக தன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறார்கள்."
பள்ளிகள் மாறவேண்டும் என்கிறீர்கள். ஆனால், பாடத்திட்டமே மோசமாகதானே இருக்கிறது...? 
"சமச்சீர் கல்வி எவ்வளவோ பரவாயில்லை. அது மாணவர்களை சிந்திக்க தூண்டுகிறது. அதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், நாங்கள் பயிற்றுவிக்கும் முறை மூலம் அதை இலகுவாக்குகிறோம். அதாவது சிறு கதைகள், பாடல்களை நாங்களே உண்டாக்குகிறோம். அதில் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை கொண்டு வருகிறோம். அது கற்றலை சுலபமாக்குகிறது. 
மேலும், இங்கு Ranking முறை இல்லை... இங்கு நடக்கும் தேர்வானது, மாணவர்களின் அறியாமையை அளக்கும் அளவுகோலாக இருப்பதில்லை; மாணவர்களை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. இங்கு bilingual ஆக தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துகிறோம். அதனால் அவர்கள் மொழி அறிவும் சிறப்பாக இருக்கிறது.
அதே நேரம், உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். மாற்றத்தை விரும்பும் நாங்கள் சிறு குழு. எங்களுக்கென்று சில வரம்புகள் உண்டு. அதில்தான் நாங்கள் வேலை செய்ய முடியும்." 
எனக்கு நன்றாக புரிகிறது. சரி, பெற்றோர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் தோட்ட வேலை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்...?
"பெற்றோர்களின் மனநிலையும் நிச்சயம் மாற வேண்டும். சிலர், பள்ளி என்பதை பாடத்திட்டத்தை கற்பிக்கும் இடமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பள்ளி என்பது வாழ்வியலை பயிற்றுவிக்கும் இடம். மாணவர்கள் விவசாயத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் நாளை அவர்கள் அரசு அதிகாரிகளாக அல்லது அரசு கொள்கைகளை வடிவமைக்கும் இடத்திற்கு செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு கொள்கைகளை வடிவமைப்பார்கள். நாங்கள் விவசாயம் மட்டும் சொல்லித் தரவில்லை, நெசவு தொழில், கட்டடக் கலையையும் சொல்லிக் கொடுக்கிறோம்.அதாவது மாணவர்கள் சுயச்சார்புடன் இருக்க பயிற்றுவிக்கிறோம்.
மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை அவர்களுக்கு மதிய நேரத்தில் வேக வைத்து தருகிறோம். ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் அவர்களே வளர்த்த காய்கறிகளை அவர்கள் உண்ணுகிறார்கள்."
ஹூம். கட்டட கலை என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது, பள்ளிகளின் கட்டடம் வித்தியாசமாக உள்ளதே...?
"லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. அதாவது, மாணவர்களுக்கு இயற்கையை சுரண்டக் கூடாது என்று நாம் கற்று தரும்போது, அவர்களின் சூழலும் அது மாதிரிதானே இருக்க வேண்டும். இந்த கட்டடங்களில் அதிக அளவில் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையை சுரண்டி கட்டவில்லை. இந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதை கொண்டு கட்டி உள்ளோம். மேலும், பகலில் இந்த கட்டடங்களில் தேவையான அளவிற்கு வெளிச்சமும், காற்றும் இருக்கும். அதனால், மின்விசிறியும், விளக்கும் தேவையில்லை. குழந்தைகளிடம், அணு உலையால், அனல் மின் நிலையத்தால் சூழல் கேடு என்று பயிற்றுவிக்கும் முன், மின்சாரத்தை விரயமாக்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்."
நீங்கள் புனேவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்காமல் தமிழகம் வந்தீர்கள். உங்கள் மாணவர்களிடம் அந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசி உள்ளீர்களா...?
"நிச்சயமாக. அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருகிறோம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்கிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அது போல் வாழவும் பயிற்றுவிக்கிறோம்."
எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், உங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. மேல் படிப்பிற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டும். அதை எப்படி உங்கள் மாணவர்கள் எதிர் கொள்கிறார்கள்...? 
"ஆம். ஆனால் நான் முன்பே கூறியது போல், எங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. வழக்கமான பள்ளிகளுக்கு இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அதில் தங்களை பொறுத்திக் கொள்ள சில காலம் எடுக்கிறது. ஆனால், அடித்தளம் சிறப்பாக உள்ளதால் அதிலும் நல்ல மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். புரிந்து கொண்டு பயில்கிறார்கள்." என்று சொன்ன மீனாட்சி, பேட்டியின் முடிவில் ஒரு விஷயத்தை சொன்னார். அதுவே இந்த கட்டுரைக்கும் சிறந்த முடிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பெரும் பகுதியை பள்ளிகளில் கழிக்கிறார்கள். அதனால், அந்த இடம் அவர்களுக்கு பிடித்தமான இடமாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்பி கற்க வேண்டும். இறுக்கமான சூழல் இருக்க கூடாது. நாம் மோசமான முறையில் அவர்கள் மீது ஒன்றை திணிக்கும் போது, மோசமான ஒன்றைதான் அறுவடை செய்ய முடியும். நாம் அன்பையும், அறத்தையும் நல்ல சூழலில் விதைத்தால், இந்த பிரபஞ்சம் பூக்களால் நிறையும்.”
ஆம். புவிதம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது

SSA - SWACHH VIDAYALA PURASKAR AWARDS - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்டபள்ளிகளில் விரைவில் குழு ஆய்வு - இயக்குனர் செயல்முறைகள்


ஜூலை 2017மாத பள்ளி நாட்காட்டி...

>8 &15& 22 -Working Saturdays.                            
>11-world population day
>15- Kalvi valarchi naal
                          
>10 to14 - Brc primary level All Subject training -Batch 1.                    
>24to28 -Brc primary level training -Batch 2
>R.L-Nil
>July total holidays -7
> No of working days -24
 total working days -42

சனி, 1 ஜூலை, 2017

PGTRB Exam Tips

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எளிய டிப்ஸ் இதோ

 1663 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2ந் தேதி நடைபெறும். இந்த தேர்விற்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முக்கிய பாடத்தில் இருந்து 110 கேள்விகளும், கல்வி பயிற்று முறையில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 10 கேள்விகளும் என்று மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.

1. தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் நீங்கள் கடைசி இரண்டு நாட்களில் புதிதாக எதையும் படிக்காதீர்கள். இதுவரை படித்தவற்றை திரும்ப ஞாகப்படுத்திக் கொள்ள மட்டும் செய்யுங்கள்.

2. ஒரு சிலர் கடைசி இரண்டு நாட்கள் மட்டும்தான் படிப்பார்கள். நீங்க எப்படி? படித்துவிட்டீர்களா? அல்லது இனிதான் படிக்கனுமா? கடைசி நாட்களில் புதிதாக படிப்பவர்கள் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களை படிப்பது நல்லது.

3. கடைசி இரண்டு நாளாவது படிக்குமே என நினைப்பவர்கள் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு படிக்க முடியுமோ அதைப்படிக்கலாம் என நினைக்காதீர்கள். முடிந்த அளவிற்கு மாதிரி வினாத்தாள்களை மட்டுமே கடைசி நாட்களில் படிப்பது நல்லது.

4. மாதிரி வினாத்தாளில் எல்லாப் பாடங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் இருக்கும். அதனால் மாதிரி வினாத்தாள்களை நன்றாக படியுங்கள். படிப்பதை தெளிவாகப் படியுங்கள். மனதில் நிலைத்து இருக்கும் படி அனுதின நடைமுறை சம்பவங்களோடு இணைத்து படியுங்கள்.

5. முறையாக டிஆர்பி தேர்விற்கு தயாராகி வருபவர்கள். கடைசி இரண்டு நாட்களில் படித்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக எதையும் படிக்காதீர்கள். மாதிரி வினாத்தாள்களை வைத்துப் படித்து உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

6. தேர்வு நெருங்க நெருங்க தேவையில்லாத பயம் வரும். அந்த பயத்தை முதலில் துரத்துங்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

7. நாளைக்கு தேர்வு என்றால் பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு முந்தைய நாள் ரொம்ப நேரம் கண்விழித்து படிப்பதுதான். தயவு செய்து அந்த தவற்றை நீங்கள் செய்யாதீர்கள். தேர்வுக்கு முந்தைய நாள் போதுமான அளவிற்கு தூங்கி எழுந்து செல்லும் போதுதான் உடலும், மூளையும் தெளிவாக இருக்கும்.

8. தேர்வு நாள் அன்று தேர்வறைக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். காலை உணவைக் கட்டாயம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்.

9. தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு படித்தவைகள் எளிதில் நினைவுக்கு வரும். பதறிய காரியம் சிதறும். பதறாமல் நிதனமாக தேர்வில் செயல்படுவது அவசியம்.

10. ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்

தேர்வு என்பது நம் வாழ்வில் நாம் அடுத்த நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகும். தேர்ந்தெடுக்கப்படும் வரை முயற்சியை கைவிடக்கூடாது.

"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"

CPS : ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

CPSஐ நடைமுறைக்கு கொண்டு வந்ததில் மத்திய அரசின் செயல்பாடுகள்

மத்திய அரசின் 2001-2002 பொது பட்ஜெட்டில் ஓய்வூதியம் வழங்கும் சுமையை
கருத்தில் கொண்டு எதிகாலத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறையில்
சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசின் கொள்கை முடிவாக
முதன்முதலில் பாராளுமன்றத்தில் அறிவித்தது.மேலும் புதிய ஓய்வூதிய திட்டம்

New Pension Schme அறிமுகப்படுத்தப்படும் என உரையாற்றப்பட்டது.

2002-2003 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அக்டோபர் 2003 முதல் பணியில்
சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டம் நடைமறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்த
அறிவிப்பினை தொடர்ந்து பாதுகாப்பு துறையில் (இராணுவம்) பணிபுரிபவர்களின்
கடும் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு
மட்டும் cpsயிலிருந்து விதிவிலக்கு அளித்து மத்திய அரசு உத்திரவிட்டது.
புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் அந்த நிதியை
கையாள்வதற்காகவும்,ஆகஸ்ட் 23,2003 இல் ஓய்வுதிய நிதி ஒழுங்குப்படுத்துதல்
மற்றும் மேம்படுத்துதல் ஆணையம் (pension fund regulatory and development
authority PFRDA) என்ற அமைப்பு ஒன்றை மத்திய அரசு
எற்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களின் நிதியினையும்
கையாள்வதே இதன் பணியாகும்.
இதனை தொடர்ந்து 22.12.2003 இல் வெளியிட்ட மத்திய அரசின் நிதித் துறை
அறிவிப்பின் மூலம் 01.01.2004 முதல் மத்திய அரசு பணியில் சேரும் அனைத்து
வகை பணியாளர்களுக்கும் (பாதுகாப்பு படையை தவிர)  CPSதிட்டத்தினை மத்திய
அரசு அவசர சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது.இதனால் டிசம்பர் 22ஆம் நாளை
CPSயில் உள்ளவர்களுக்கு கறுப்பு தினம் என்பதே சொல்லலாம்.மேலும்
29.12.2004 அன்று மத்திய அரசு PFRDA அவசர சட்டத்தை நிறைவேற்றியது..
2004 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த புதிய மத்திய
அரசும் CPS திட்டத்தினை முழுமனதார ஏற்று சட்டமாக்க துடித்தது.மேலும்
14வது பாராளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர்    அவர்கள் 12.02.2005 அன்று
CPSஇன் PFRDA மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவினை
ஆராய்வதற்காக பார்லிமென்ட் நிலைக் குழுவிற்கு அனுப்பட்டது. அதில் சில
மாற்றங்களை செய்து 14.11.2008 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார்
இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாததால்,அந்த மசோதா
காலவதியாகிவிட்டது.
2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த அதே மத்திய அரசு
மீண்டும் CPS இன் PFRDA மசோதாவினை அன்றைய நிதியமைச்சர்   அவர்கள்
18.03.2011 இல் மக்களவையில் தாக்கல் செய்தார். பலகட்ட விவாதங்களுக்கு
பின்னர் மக்களவையில் 04.09.2013 அன்று CPS மசோதா நிறைவேற்றப்பட்டது.
04.09.2013 அன்று மக்களவையில் தாக்கல் செய்த cps மசோதாவில் இடம்பெற்றுள்ள
சில தகவல்கள்
Cps மசோதாவானது மொத்தம் 513 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் 135 முதல் 140
வரையுள்ள பக்கங்களில், இதில் இணைந்துள்ள மாநிலங்களை பற்றி கூறுகிறது.
04.09.2013 அன்று இத்திட்டத்தில் 26 மாநிலங்கள் இணைந்துள்ளது.
136வது பக்கத்தின் 2வது பத்தியில் கூறியுருப்பதாவது
   The state governments here not obliged to join.they joined
voluntarily. only for the central government employes,it is mandatory
from 1.1.2004.
   இதன் தமிழாக்கம்
நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை அமுல்படுத்த நிர்பந்தம்
செய்யவில்லை. அவர்களின் விருப்பத்தை பொறுத்ததே.இது மத்திய அரசு
ஊழியர்களூக்கு மட்டுமே.அது 01.01.2004 முதல் நடைமுறைக்கு வந்தது.
மசோதாவில் உள்ள தமிழக அரசை பற்றிய வரிகள்
I want to remind him that tamil nade also by a notification made on
6th August 2003, joined the new pension scheme with effect from
1.4.2003.
மசோதாவில் உள்ள  மற்ற பக்கங்களில், இணைந்துள்ள சந்தாதாரர்களின்
எண்ணிக்கை, அவர்களிடம் பிடித்த தொகை, காப்பீடு செய்யும் நிறுவனங்கள்
மற்றும் காப்பீட்டின் வகைகளை பற்றி கூறுகிறது.
மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து 06.09.2013 இல் மாநிலங்களவையில் CPS
மசோதா நிறைவேற்றப்பட்டு,குடியரசு தலைவரால் 18.09.2013 அன்று ஒப்புதல்
வழங்கி 19.09.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் ஓய்வூதியத் துறையால்
வெளியிடப்பட்டு CPS திட்டத்தை  சட்டமாக்கப்பட்டுள்ளது.
CPS மசோதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்டும் சட்டமாக்கப்படாமாலேயே பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு
மாறாகவும் மக்களாட்சிக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.என்பது
தான் இதில் முக்கியமான‌ விசயமாகும்.
நிதி தொடர்பான அனைத்து ம்சோதாக்களும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட
பின்னர் தான் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.ஆனால் CPSயானது
சட்டமில்லாமலே நடைமுறையில் இருந்தது.
இந்த CPSதிட்டமானது 2013ம் ஆண்டு வரை கேரளா,திரிபுரா,மேற்கு வங்காளம்
போன்ற மாநிலங்களில்  அமுல்படுத்தவிலை.ஆயினும் இறுதியாக 1.4.2013 முதல்
கேரளாவிலும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.மற்ற இரு
மாநிலங்களும் GPF நடைமுறையில் தான் இருக்கிறது.
இந்த திட்டத்தால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே
இலாபம். அரசு ஊழியர்களுக்கு வேதனைகளும் ஏமாற்றமும் தான் மிஞ்சும்.
மத்திய அரசு CPS கணக்குகளை நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்களை கொண்டு
பராமரிக்கப்படுகிறது. ஆனாலும் திட்டத்தால் ஊழியர்களுக்கு எந்த வித பலனும்
இல்லை......



இவன்
அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம். தருமபுரி

மாணவர்களின் சிகை அலங்கரிக்கும் அன்பு ஆசிரியை

"தொடர்ந்து கஷ்டங்களை மட்டுமே வாழ்க்கையில் சந்திச்ச வலிகளோடு இருந்தவள் நான். டீச்சரானப் பிறகு என் மாணவர்களின் புன்னகைதான், என்னோட எல்லாக் கஷ்டங்களுக்கும் மருந்தாக அமைஞ்சது. இவங்கதான் என் சொந்தங்கள். என் பிள்ளைகளாக, தம்பி - தங்கைகளாகப் பார்க்கிறேன்" எனச் சொல்லும்போதே ஆசிரியை மகாலட்சுமியின் குரல் நெகிழ்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது என கல்வியைத் தாண்டி, அவரது ஒவ்வொரு செயலிலும் தாயுள்ளம் பளிச்சிடுகிறது.


"2006-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். இங்கே மலைவாழ் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம் படிக்கிறாங்க. படிப்பின் வாசனையே தெரியாதிருந்த மக்களுக்கு, இந்தக் குழந்தைகள் வழியேதான் கல்வியின் மணத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கு வந்த புதுசுல, மாசக்கணக்கில் முடிவெட்டாமல், அழுக்கு உடைகளில் இருக்கும் மாணவர்களைப் பார்த்து திகைச்சுப்போனேன். 

'எல்லோரும் முடிவெட்டிகிட்டுதான் ஸ்கூலுக்கு வரணும்'னு கண்டிப்பா சொன்னேன். ஆனால், அடுத்த நாளிலிருந்து நிறையக் குழந்தைங்க ஸ்கூலுக்கு லீவுப் போட ஆரம்பிச்சுட்டாங்க. விசாரிச்சப்போதான், அவங்க முடிவெட்டிக்ககூட காசு இல்லாத நிலையில் இருக்கிறது தெரிஞ்சது. ரொம்பவே துடிச்சுப் போயிட்டேன். நம் குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம், கூச்சம் பார்த்தால் குழந்தைகளின் முகத்தில் புன்னகை மலராதுன்னு நானே முடிவெட்டிவிட ஆரம்பிச்சேன்'' என்று சொன்னதும், நமக்குள் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறார் மகாலட்சுமி. 



''ஆரம்பத்தில் எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெட்டிவிடுவேன். ஹேர் ஸ்டைல் கோணலா இருக்கும். அதுக்கும் கூச்சப்பட்டுக்கிட்டு பசங்க லீவு போட்டுடுவாங்க. அதனால், ஒரு சலூன் கடைக்குப்போய் நாள் முழுக்க இருந்து முறையா முடிவெட்டக் கத்துகிட்டேன். அதுக்கு அப்புறம் 'டீச்சர், மறுபடியும் சொதப்பிடுவீங்களோன்னு பயந்தோம். ரொம்ப நல்லா வெட்டிவிட்டுட்டீங்க'னு பசங்க பாராட்டினதும் சந்தோஷப்பட்டேன். 

அப்போ ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா தினம் மூன்று மாணவர்களுக்கு முடிவெட்டிவிடறேன். ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு முடிவெட்ட அரை மணி நேரம் எடுத்துக்குவேன். இப்போ பத்தே நிமிஷத்துல வெட்டிவிடுற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டேன். நகம் வெட்டிவிடுறது, குளிப்பாட்டிவிடும் செயல்களையும் செய்யறேன். இதெல்லாம் அவங்களை இன்னும் நெருக்கமா உணரவைக்குது" என்கிற மகாலட்சுமி, மாணவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதையும் வழக்கமாகச் செய்துவருகிறார். 



"பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் பத்து பேரைத் தவிர மத்தவங்க பள்ளியில் இருக்கும் விடுதியில் தங்கிப் படிக்கிறவங்க. பெற்றோரைப் பிரிஞ்சு விடுதியில் இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை. அவங்க உணர்வுகள் எப்படி இருக்கும்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். அதனால், அவங்களுக்கு நானே ஊட்டிவிட ஆரம்பிச்சேன். பள்ளி முடிஞ்சதும் மாலை நேரங்களில் அவங்களோடு சேர்ந்து விளையாடுவேன். 

மாணவர்கள் படிப்பு எந்த வகையிலயும் பாதிக்காத வகையில்தான் இந்த அன்பும் அரவணைப்பும் இருக்கும். 'நாம எதுக்குக் குளிக்கணும், சுத்தமா இருக்கணும், நோய் வராமல் இருக்க என்ன செய்யணும், பாடப் புத்தகம் தாண்டிய அறிவுசார்ந்த விஷயங்களை எப்படித் தெரிஞ்சுக்கணும்'னு பல விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பேன்'' என்று மகாலட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். 


"பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முகநூல் நண்பர்கள் வழியே கிடைக்கும் பணத்தில், இப்போ கூடுதலாக ஒரு நபரை நியமிச்சிருக்கிறோம். அவரும் என்னோடு சேர்ந்து இந்தக் குழந்தைகளுக்கு முடிவெட்டிவிடுகிறார். பல கிராமியக் கலைகள் வழியே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிக்க வராங்க. இவங்களோடு என் பையனும் இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் நான்தான் முடிவெட்டிவிடுறேன்" என புன்னகைக்கிறார் மகாலட்சுமி. 

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15 ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர்.
சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் - 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு

சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 இடங்களை நிரப்ப, நாளை(ஜூலை 2), தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 1,663 இடங்களுடன், கூடுதலாக, 1,712 இடங்கள் சேர்த்து, 3,375 பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

குரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்


சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


 குரூப் - 1, தேர்வு, முறைகேடு, இல்லை, டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்..


இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1 தேர்வில், தேர்வு மையங்கள் தோறும், வினாத்தாள், விடைத்தாள் வழங்குவது, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை கட்டி, பாதுகாப்பாக முத்திரையிட்டு ஒப்படைப்பது வரை, அனைத்தும், வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். விடைத்தாள்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, பின், கலைக்கப்பட்டு, விடைத் தாள்களில், பதிவெண்கள் மறைக்கப்பட்டு, டம்மி எண்கள்இடப்படும்.

எந்த விடைத்தாள், யாருடையது என்பது மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. விடை திருத்தும் மதிப்பீட்டாளர்களுக்கோ மற்றும் தேர்வாணைய அலுவலர்களுக்கோ, யாருடைய விடைத்தாள் எது என்பது தெரியாது. 
அனுபவமிக்க மதிப்பீட்டாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு மதிப்பீட்டாளர்களால், இருமுறை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால் மூன்றாவது மதிப்பீடும் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு நிலையிலும், விடைத்தாள் திருத்தும் பணி மிக நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்புட னும், சந்தேகம், விதி மீறலுக்கு இடமின்றி நடக்கிறது. பின், தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

தேர்வாணைய தலைவர் விடுப்பில் செல்வதற்கும், குரூப்- - 1 தேர்வு முடிவு வெளியிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வேலையற்ற இளைஞர்களுக்கு, தேர்வாணை யம் நம்பிக்கையூட்டும் நிறுவனமாக விளங்கு கிறது. எனவே, ஆதாரமற்ற செய்திகள், இளைஞர்களின், குறிப்பாக தேர்வர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும், விரக்தியையும் ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ இடங்களை நிரப்ப, நாளை, தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, ௧,௬௬௩ இடங்களுடன், கூடுதலாக, ௧,௭௧௨ இடங்கள் சேர்த்து, ௩,௩௭௫ பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

SSA - கணிணி வழிக்கற்றல்(CAL -RAA) - செயல்திட்ட வழிக்கற்றல் (PBL)செயல்பாடு மாவட்ட அளவிலான 1 நாள் பயிற்சி - பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம் செயல்முறைகள்!



INSPIRE Award - Online Nomination for the year 2017-18 has been Extended till 15 August 2017.

ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது ; கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை !!!

மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. இம்முறை பள்ளிக் கல்விக் குறைபாடுகளைக் களையும் பொருட்டு அரசிடம் 20 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். வழக்கு மறுபடியும் விசாரணைக்கு ஜுலை 14 அன்று வரவுள்ளது. அதற்குள் அரசு தனது பதில்களை அளிக்குமா அல்லது வழக்கு மறுபடியும் தள்ளிப்போடப்படுமா என்பது தெரியாது. மேலும், ஜுலை 3 முதல் நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய
வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை.
பள்ளிக் கல்வித் துறையிலுள்ள சீர்கேடுகளைக் களைந்து மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் யாருக்கு இருப்பதற்கில்லை. ஆனால், கல்வி உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அழுக்குகளையும் வெளுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான் என்று கருதுவது சரியல்ல. அதேபோல், ஆசிரியர்களுடைய அமைப்புகளினால்தான் சீர்கேடுகளைக் களைய முடியவில்லை என்று எண்ணுவதும் சரியல்ல.
கவலை தரும் கேள்வி
ஆசிரியர் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமா என்று நீதியரசர் அரசை கேட்டுள்ள கேள்வி, ஆசிரியர் அமைப்பு களுடன் கடந்த 50 வருடங்களாகச் செயல்பட்டுவரும் என்னைக் கவலை கொள்ளவைக்கிறது. நீதிபதி எழுப்பியுள்ள 20 கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது என்றாலும் அவர் எழுப்பிய 19-வது கேள்வி ஆசிரியர் அமைப்புகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியதால் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது.
நீதிபதி தனது உத்தரவில் எழுப்பியுள்ள கேள்வி இதுதான்: “காவலர்களைப்போல அரசு ஆசிரியர்கள் சங்கங்களையோ அல்லது அமைப்புகளையோ தொடங்குவதை ஏன் தடைசெய்யக் கூடாது? ஏனென்றால் தவறு செய்யக்கூடிய ஆசிரியர்கள் தங்களுடைய அமைப்புகள் / சங்கங்கள் மூலம் அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன் கல்வி கற்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாலும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான் என்பதாலும் இத்தேவை எழுகிறது.”
ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்பதும், பள்ளிக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அப்பள்ளிக் கல்வி சீரழிந்துவருவதற்கும், கல்வியின் தரம் குறைந்து வருவதற்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. இது பிரச்சினைக்குத் தீர்வு காண உதவாது. மேலும் இக்கேள்விக்கான பதிலை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதும் தவறு. எந்த அரசானாலும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட முடியாது. இந்தக் கேள்விக்கான விடை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அதைப் பரிசீலித்த பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் பெற முடியும்.
நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டதுபோல் அரசமைப்புச் சட்டத்தின் 21-ஏ என்ற பிரிவில் இந்தியாவிலுள்ள 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் 2002-ல் கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே 1950 ஜனவரி 26 முதலாகப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 19-வது பிரிவில் சங்கம் அமைக்கும் உரிமையும், அமைதியாக கூடுவதற்கான உரிமையும், பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் ராணுவ வீரர்களுக்கும், பொது அமைதியை நிலைநாட்ட விழையும் படைகளுக்கும் இப்படிப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தி அவர்கள் உரிய கடமைகளைப் பணியாற்றும் வண்ணமும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று அதிகாரம் வழங்கியுள்ளது.
இப்பிரிவைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் 1966-ம் வருடம் காவல் படையினர் (உரிமைகளைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை உருவாக்கியது. 1984-ல் இச்சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, “காவலர் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் கிட்டாது” என்று கூறப்பட்டுள்ளது. அதனால் காவலர்கள் சங்கம் அமைப்பது (அ) கூட்டமாகக் கூடி தீர்மானங்கள் இயற்றுவது சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவலர் சங்கம் போட்ட வழக்கில் இச்சட்டப் பிரிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது (1987). வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியின்போது காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்கியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியும் அரசு இதற்கு இசையவில்லை. பாதிக்கப்பட்ட காவலர்கள் போட்ட வழக்குகளையும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கம் அமைக்கும் உரிமை
காவல் படையினரைத் தவிர மற்ற பகுதியினர் சங்கம் அமைக்கும் உரிமையை யாரும் தடைசெய்ய முடியாது. 1926-ம் வருடத்திய தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களும் தங்களுக்கான தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் தொழிலாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதனால் அவர்கள் தங்களது அமைப்புகளைத் தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்கின்றனர். இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஒழுங்கு விதிமுறையின் கீழ் தங்களது அமைப்புகளை உரிய முறையில் பதிவுசெய்திருக்கின்றனர். ஆசிரியர் பணிகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுடைய ஆலோசனையைப் பெறும் வகையில் மாநிலங்களிலுள்ள சட்ட மேலவையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது - பிரிவு 171(3) (சி). தமிழ்நாடு சட்ட மேலவையில் - அது உயிருடன் இருந்தவரை - அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிறப்பாகப் பணியாற்றியதை மறக்க முடியாது (மாயவன், பார்த்தசாரதி).
ஒருவர் அரசுப் பணியில் இருக்கும்போது அங்குள்ள ஊழியர் அமைப்புகளிலும் பொறுப்புகளில் இருந்துகொண்டு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? அதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்தக் கேள்வி பல முறை நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டியுள்ளது. 1964-ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கிய ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்பு “அரசு ஊழியர்களாக இருப்பினும் அவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியிலுள்ள அடிப்படை உரிமைகள் பொருந்தும்; அவர்கள் சங்கம் அமைத்துக்கொள்வதோடு தங்களது உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் தவிர்த்த மற்ற போராட்டங்களில் ஈடுபடலாம்” என்றும் தெளிவாக வழிகாட்டியது. இதைத் தொடர்ந்து, 1966-ல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தொடர்ந்த ஒரு வழக்கில் சங்கம் அமைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இப்படிப்பட்ட பின்னணியில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி வருத்தத்தைத் தருகிறது. சங்கம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வடிவம். ஏற்கெனவே அரசானது சங்கங்களை நசுக்கத் தருணம் பார்த்திருக்கும் நிலையில், இப்படியான கேள்வி எவ்விதத்தில் நியாயமாகும்? மேலும், காவல் பணியாற்றுவோருடன் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரை ஒப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானதாக அமைந்துவிடாதா? நீதிபதியின் 19-வது கேள்விக்கான பதில் இதுதான்.
1.ஆசிரியர்களுக்கும் காவல் துறை பணியாற்றுபவர் களுக்கும் உள்ள உரிமைகள் வெவ்வேறு. 2. ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது. 3. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய சமுதாயக் கடமையில் ஆசிரியர்களுக்கும், அவர்களது அமைப்புகளுக்கும் பெரும் பங்குண்டு. ஆகையால், இந்தக் கேள்வியை நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு , ஏப்ரல் 29,30 தேதியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு !!

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
EXAMINATION RESULTS
Dated: 30-06-2017

வெள்ளி, 30 ஜூன், 2017

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை- BEd கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்


நீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ் கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக சுகாதாரத் துறைக்கு எதிராக ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்துப் போடும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சுகாதாரத்துறைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்.....

சென்னை: 400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னையை அடுத்த கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பலர், பள்ளிக்குச் செல்லாமல், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதையறிந்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேல், மாணவர்களுக்கு, முறையான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். கல்வியின் மூலமாக, அவர்களின் குற்ற ஆர்வத்தை தடுக்கலாம் என்றும் தீர்மானித்த அவர், கண்ணகி நகர், எழில் நகர் போன்ற இடங்களில் வசிக்கும் அடிப்படை வசதியற்ற, பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் விவரத்தை சேகரித்தார்.
இதன்படி, சுமார் 412 மாணவர்கள், பள்ளிகளில் இருந்து இடைநின்றது தெரியவந்தது. 18 வயதுக்கு மிகாமல் உள்ள இந்த மாணவர்கள் அனைவரையும் பெரும் முயற்சி எடுத்து, சக போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பில் அத்தியாவசிய செலவுகளை செய்து, பள்ளியில் சேர்த்துள்ளார் சுந்தரவடிவேல்.
இந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு, நல்ல வழியை காட்ட, கடந்த 8 மாதங்களாக பெரும் முயற்சி எடுத்து, தற்போது அதனை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டப் பணிக்காக, தன்னோடு உதவிக்கு நின்ற இளம் போலீஸ் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

2017-2018-ஆம் கல்வியாண்டின் பள்ளி வேலை நாட்கள் & விடுமுறை விவரம் -Single Page.

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ளது படியுங்கள்.