HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 14 மே, 2017

மத்திய அரசு ஒதுக்கீட்டை பயன்படுத்தும் வாய்ப்பை பலர் இழந்து வருகின்றனர் - வேளாண் படிப்பில் !!

இந்த தகவல், தமிழக மாணவர்களுக்கு தெரியாததால், மத்திய அரசு ஒதுக்கீட்டை பயன்படுத்தும் வாய்ப்பை பலர் இழந்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள், வேளாண் படிப்புகளை தேர்வு செய்வது அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, வேளாண்கல்வியில் சேருவதற்கு, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன; இது
மருத்துவ படிப்புக்கு வந்த விண்ணப்பங்களை விட, 26 சதவீதம் அதிகம். இதனால், ஆண்டுதோறும், வேளாண் படிப்புகளின் ’கட் ஆப்’ மதிபெண், மருத்துவ ’கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு இணையாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு, ’நீட்’ தேர்வு கடுமையாக இருந்ததால், மருத்துவ படிப்பில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும் 21 இணைப்புக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 13 பட்டப்படிப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள, 2,820 இடங்களில், 65 சதவீதத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாகவும், மீதமுள்ள, 35 சதவீத இடங்கள், அந்தந்த கல்லுாரிகள் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
இந்த இடங்களைத் தவிர்த்து, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,) நடத்தும் நுழைவு தேர்வு மூலம் 15 சதவீத இடங்கள், கூடுதலாக நிரப்பப்படுகின்றன. ஆனால், தமிழக மாணவர்களுக்கு, இங்கு 2,828 இடங்கள் மட்டுமே இருப்பதாக கணக்குக் காண்பிக்கப்படுகிறது. ஐ.சி.ஏ.ஆர்., நடத்தும் நுழைவுத் தேர்வு குறித்து, பெரிதாக விளம்பரங்கள், தகவல்கள் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
இதனால், வேளாண் படிப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு இருக்கிறது என்பதும், அதற்கு ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத் தேர்வு நடத்துகிறது என்பதும் பெரும்பாலான பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியவில்லை. ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் மட்டுமே, இதுகுறித்து தகவல்கள் உள்ளன.
இந்த நுழைவுத்தேர்வு குறித்து, சத்தமின்றி அறிவிக்கப்பட்டு, மே 6ம் தேதியே முடிக்கப்பட்டு விட்டது. வேளாண் பல்கலை, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததால், ஐ.சி.ஏ.ஆர்., மூலம் கிடைக்கும் வேளாண் படிப்பு இடங்களை தமிழக மாணவர்கள் பலர் இழந்துள்ளனர்.
வேளாண் பல்கலை துணைவேந்தர், ராமசாமியிடம் கேட்ட போது, ”மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், 15 சதவீத இடங்கள் ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத்தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்த இடங்கள் வேளாண் பல்கலை அறிவித்துள்ள, 2,820 மொத்த இடங்களில் சேராது.
அது தனியாக வழங்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் வேளாண் பல்கலை தகவல் கையேட்டிலும், ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்திலும் உள்ளன,” என்றார்.
வேளாண் பல்கலை தரும் தகவல் கையேடு, விண்ணப்பம் வாங்கும்போது தான் தரப்படுகிறது; அதற்கு முன்பாகவே, இந்த நுழைவுத் தேர்வு நடந்து முடிந்து விட்டது. அடுத்த ஆண்டிலாவது, இந்த தவறு திருத்தப்பட வேண்டியது அவசியம்.